Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Wednesday, January 15, 2014

பொங்கியது ...எது ?








பொங்கியது ……………..எது ?

·         வருடந்தோறும்
வரவேற்கப்படுகிறது
ஆங்கிலப் புத்தாண்டு.
பட்டாடை உடுத்தி,
பட்டாசு வெடித்து
நள்ளிரவுவரை விழித்து,
இன்னும்,இன்னும்….

·         கொண்டாட்டம் குறித்த
விளம்பர அறிவிப்பு
விடுதிகள் முன்பதிவு.
மதுவும் கோப்பைகளும்
புதிய விலையில்.
நொறுக்குத் தீனிகளின்
வாடை
வயிற்றைப் புரட்டும்.
வானம் நாணும் வண்ணம்
அலங்கார வெளிச்சம்.


·         வாடி வதங்கிப்போனாள்
தைமகள்.
தமிழர் திருநாளும்
தமிழ்ப் புத்தாண்டும்
அந்த மாதத்தில் தானே
நலிந்து போய் கிடக்கின்றன.

·         தமிழ் மாதங்கள்
தமிழரின் நெஞ்சங்களில்
பதிவதில்லை.
வலைத்தளங்களில்
அவை சிக்கித் தவிக்கின்றன.

·         பொங்கல் !
பொங்கலோ பொங்கல்…
யாருக்கு?
வண்ணங்கள் விற்கும்
வியாபாரிக்கா?
சுட்ட சுண்ணாம்பும்
கிளிஞ்சல் கூடுகளும்
சூளையிலேயே சுட்டு
எலும்புக் கூடுகளாயினவா ?

·         பர்கரும்,பீட்சாவும்
இளம்தலைமுறையின்
விருப்பமாகிப் போனதால்,
இனிக்கும் கரும்பை
விதைத்தவன் நெஞ்சில்
கசப்பு.
காவிரி வறண்டதால்
கரும்புகள்
கணுக்கள் அளவே
வளர்வது கொடுமை.
கரும்பின் மகத்துவத்தை
என் பெயரப் பிள்ளைகளுக்குச்
சொல்லப் போவது
யார் ?

·         மஞ்சளும் இஞ்சியும்
கொத்துக் கொத்தாய்
தூக்கு மாட்டித்
தொங்குகின்றன,
பொங்கல் பானைகளின்
கழுத்துகளில்.
அதன்
மருத்துவப் பக்குவம்
எடுத்துச் சொல்ல
நம் நம்மாழ்வார்
இன்றில்லையே !












·         உடையாத
காப்பர் பாட்டம்
பாத்திரத்தின்  வரவு,
மாத வருமானத்தின் செலவு.
அவை போகிகளின் போது
புது வெளிச்சம் பெறுவதால்
குயவர்களின் வாழ்க்கையோ
சுக்கு நூறாக
உடைந்துபோய்
கிடக்கிறது
மண்பாண்டங்களாக..

·         விடியலில் எழுந்து
சாணம் தெளித்து
மாவுப் புள்ளிகளால்
வாசல் நிறைத்து
உறவுகளாய் கோடு
இணைத்து
பாச நெஞ்சங்களாய்
வண்ணம் நிறைத்து
அடடா !அடடா!
வாலிபப் பெண்கள்
ரவிவர்மன்
வழித்தோன்றல்களே!
இன்றோ !
காலம் தலைகீழாய்.
ஒட்டுக் கோலங்களென
சிமெண்ட் தரையில்
ஒட்டிக் கிடக்கின்றன
பட்டும் படாமலும்.



·         போகியின் போது
எரிப்பதற்கு
பழசுகள் ஒன்றுமில்லை,
குப்பைகள் தேங்கிக் கிடக்கும்
மனசைத் தவிர .

·         கீற்றால் மறைக்கக்
கரும்பை நட்டு
பொங்கல் பொங்க
அடுப்பு வெட்டி
பொங்கல் பானை
பொங்கி வழியும்போது
பொங்கலோ பொங்கல்
எனும் உரத்த ஓசை
இப்பொழுதெல்லாம்
ஊடகங்களில்தான்
உரக்க ஒலிக்கின்றன.
சூரியனை வணங்கும்
வாய்ப்பொன்று
நழுவுவதில் வருத்தம்தான்.

·         உழவுக்கும்
கிராம வாழ்க்கைக்கும்
உதவிய மாடுகளுக்கு
நன்றி செலுத்தும் நாள்.
மாடுகளின் பட்டிகளுக்கு
விடுதலைதான்.
மிரளும் மாடுகளின்
கழுத்தில்
மணமக்கள் போல
மாலைகள்.
பொங்கலோ பொங்கல்,
மாட்டுப் பொங்கல்.
என்ன இனிமை !
என்ன இனிமை !
இன்று
மாடுகள்
இயந்திரங்களால்
இயந்திரமாகிப் போயினவோ ?
பால் கொடுத்த
தாய் மடியை
மறக்க நினைப்பவர்களுக்கு
மன்னிப்பேது ?

·         கன்னியர்கள்
கைவளை குலுங்க
கணீர் குரலில்
தமிழ்ப் பண்பாட்டையும்
காதலின்
நினைவோட்டத்தையும்
கதை சொல்லிக்
குனிந்து நிமிர்ந்து
கைகளை
இணைத்து அடித்துக்
கும்மியடித்துப் பாடுவது
தனி அழகுதான்.
காலம் பல கடந்தாலும்
கண்ணுக்குள் வாழும்
நினைவலைகள்.
அடுக்குமாடிக் குடியிருப்புகள்
இந்தச் சுகத்தை
அறிவதேது ?

·         முறைப் பெண்,முறைமாமன்
ஓடிப்பிடித்து
உருண்டோடி
மஞ்சள் நீர்த்தெளிக்கும்
விளையாட்டை
என்றும்
மறந்திருக்குமோ ?
முன்னைய
தலைமுறைகள்.
வளரும் என் பிள்ளைகளுக்கு
நான் காட்சிப்படுத்துவது
எப்போது ?

·         மனம் நொந்து போகிறது
நகரத் தெருக்களின்,
அடுக்கு மாடிக்
குடியிருப்புகளின்
அடியில் நசுங்கிப் போன
விளைநிலமானதோ
நம்மவர் பண்பாடு ?

·         ஆறாம் தளம் அமர்ந்த
உள் இடுக்கு வீடொன்றில்
வசிக்கப் பழகுகையில்
புலம்புவதைத் தவிர
பிறிதொன்றுமில்லை.
ஊடகங்கள் உலா வரும்
வீடுகளில்,
என்றேனும் ஒரு நாள்
நம் வாரிசுகள்
வலைத்தளங்களில்
எழுதப் பழகலாம்
என் போலப்
புலம்பத் தொடங்குகையில்…..