Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Friday, December 6, 2013

பாட மறக்கும் பாட்டு


பாட மறக்கும் பாட்டு………

அதிவிடியலில்
ஒரு செய்தி துக்கத்தோடு!
நண்பர் என்ற உரிமையில்.

நண்பர்
அம்மாவின் மீது கொண்ட
அன்பு அளவிடற்கரியது.
ஆழ்கடல் அளவு.

அந்த நேரமே
அப்பாவின் நினைவுகள்
அலையாய் மோதின.

மாலையோடு
சென்ற என்னை
அழுது தழுவினார் நண்பர்.
ஆறுதல் கூறினேன்
கண்ணீரால்.

கால் வலியெடுக்க
ஆசனம் தேடி அமர்ந்து
கண்களைச் சற்றே மூடி
இரு கைகளால் துடைத்தபோது
“ எம்மாடியோவ்”என்று
பெருங்குரலெடுத்து
அழுகுரல் வந்த
திசை நோக்கிக்
கண் திறந்தேன்.

மூன்று தலமுறைக்கு
முந்தைய கிழவி ஒருவர்
தரையைப் பிளப்பது போல்
நெஞ்சிலும் தலையிலும்
அடித்துக் கொண்டு அழுதார்.

வகை வகையாய்
கதையெடுத்துக்
கடந்த காலம்
சொல்லி அழுதார்.

நினைவுகள் சற்றே
பின்னோக்க
அருக்காணி அக்கா
கண்களில் வந்து போனாள்.

பேருந்து நுழையாத
குக்கிராமம்.
தென்னை ஓலை வேய்ந்த
வரிசை வீடுகள்.

இரவு நேரத்தில்
அமைதியைக் கிழிக்கும்
அருக்காணி அக்காவின்
அழகிய குரல்.

குழந்தையைத் தூங்க வைக்கத்
தொன்று தொட்டுப்
பாடி வரும் தாலாட்டு.

தால் + ஆட்டு =தாலாட்டு
அக்கா
நுனிநாக்கை ஆட்டி ஆட்டி
“ லூ லூ லாயி லாயி ” என்று
பாடும் அழகே தனி.

அருக்காணி அக்கா
குழந்தையை மட்டுமல்ல
தாலாட்டால்
ஊரையே உறங்க வைத்தவள்.

தாம்  பிறந்தவீட்டு
வறுமையைச்
சொற்களால் வருணிப்பாள்
“ தாய்மாமன் படும்பாடு
பெரும்பாடு என்கண்ணே ”என்று
உறவின் மெல்லிதான பாலத்தை
வலிமையாக்குவாள்.

மூக்குத்தி அடமானத்தில்
மூலதனம் உருவான
உண்மை உரைப்பாள்.

ஆபத்துக்கு உதவாத
உறவுகளை
மென்மையாய் வைது
வைப்பாள்.


ஆனால்
நடுநிசி வரை
அவள் இமைகள்
மட்டும் ஏனோ
மூடமறுக்கும்.

வயிற்றின் வெறுமையா ?
மனத்தின் பெருஞ்சுமையா ?
யாரறிவார்?


அக்கா
எதையும்
வெளியில் சொல்லப்
பழகாதவள்.

காலம் செல்லச் செல்ல
அவள் செல்லப்பிள்ளையும்
பாட ஆரம்பித்தாள்
தாலாட்டு
மழலைக் குரலில்.
மரப்பாச்சிப் பொம்மையை
வைத்து.

எங்கள் ஊரில்
வீட்டுக்கொரு
அருக்காணி அக்கா
வாழ்ந்தாலும்
அவள் போல ஆகாது.

ஊரில்
மரணச் செய்தி பரவினாலும்
முதலில்
பெருங்குரலெடுத்துக்
கதறுபவள்
அவளே !

கைகளைத் தூக்கித்
தலையிலும்,மார்பிலும்
அடித்துக் கொண்டு அழுவதிலும்
ஒப்பாரி வைத்துப் பாடுவதிலும்
நடிக்கத் தெரியாதவள்
பிறரைப் போல.


அழுது முடித்து
வெளியில் வரும்போது
அவள் முந்தானையே
நனைந்திருக்கும்.
அப்படி ஒரு பாசம்
அவ்வளவு உரிமை.

அக்கா
கண்கள் சிவந்து
முகம் கழுவினாலும்
சிவந்த கண்கள் மாறாது.

ஒப்பாரிப் பாடலில்
தம் தந்தை ,தாயை
இழந்த சோகத்தை
இழையோட விடுவாள்.


உறவுகளுக்காக
இழவு கேட்க
வெளியூர் செல்ல
நேர்ந்தாலும்
அவள் தன்னை  
மாற்றிக் கொண்டவளில்லை.

அக்கா ஒரு நாள்
இறந்து போனாள்.
ஆற்று நீர்
அடித்துச்  செல்ல.
ஒப்பாரி வைப்பதற்கு
அவள் உடல் இல்லாமல்
ஊர் கூடி ஒப்புக்கு அழுதது.

தமிழன் கண்ட
அருமருந்துகள்
தாலாட்டு,ஒப்பாரி
மனச்சுமை மாற்ற.

இப்பொழுதெல்லாம்
எங்கு தாலாட்டுக் கேட்டாலும்
ஒப்பாரி ஓசை
காதுகளில் நுழைந்தாலும்
அருக்காணி அக்கா
நினைவுகளில்
மனம் உருகும்.

தீபாவளி,பிறந்த நாளெனப்
புத்தாடை எடுக்கச் செல்லும்
சமயங்களிலெல்லாம்
மகளோடு போட்டி.
எதை எடுப்பதென.
என்றுமே
பாவாடை ,தாவணி
போட்டியிட்டதில்லை.

நிஜங்களை மறந்து
நிழல்களைப் பூசிக்கும்
மனிதர்களுக்கு
எதைச் சொல்லி போதிக்க?

தொன்மையை மறக்கும்
மனமே!
பிறந்த நாள் தொட்டுப்
பழகிய மண்ணை மறப்பாயா?
வாய்வழி உண்ட தாய்ப்பால்
தொடங்கி
குடிநீர் வரையான
எல்லாம் துறப்பாயா?

வருங்காலத் தலைமுறை
மூக்கு சிந்தி அழுவதற்கு
மூளை இருக்குமா ?
அந்த வேளை வந்திடுமோ?
அச்சத்தில்
தவிக்கின்றேன்,

ஒருவேளை,
சத்தங்களின் யுத்தத்தில்
தாலாட்டும் ஒப்பாரியும்
தனிமைப் பட்டுப் போகலாம்?
மனசு கிடந்து தவிக்கிறது.
தாலாட்டு இல்லாமல்
தாய்ப்பால் சுரக்கலாமா?
ஒப்பாரி இல்லாமல்
பூதவுடல் வேகலாமா?

மேட்டுக்குடி மக்கள்
நடுத்தர வர்க்கம்
வறுமைப்பட்ட சமூகம்
இவர்களுள்
பாட மறுப்பவர்கள் யார்?
பாட மறந்தவர்கள் யார்?
பாட மறப்பவர்கள் யார்?

தாலாட்டும்,ஒப்பாரியும்
மண்ணின் தேவதைகள்.
என் மகளுக்கும்
இதைச்
சொல்லவேண்டியிருக்கிறது.
ஏனென்றால்
நான் தாலாட்டுக் கேட்டு

வளர்ந்தவன்.